உள்ளூர் செய்திகள்
இலவச வீட்டுமனை வழங்க எதிர்ப்பு - அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகை
பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்து கொள்ளலாம் என்றும் வரும் திங்கட்கிழமை வரை வேலைகளை நிறுத்தி வைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள வடக்கு அவினாசி பாளையம் ஊராட்சி கிருஷ்ணாபுரம் பகுதியில் சுமார் 1 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இதனை வருவாய்த் துறையினர் இலவச வீட்டுமனையாக வழங்க பொக்லைன் எந்திரங்கள் மூலம் சுத்தம் செய்ய அங்கு சென்றனர். அப்போது சுமார் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூடி இந்தப் பகுதியில் குடிநீர் தொட்டி உள்ளது.
மேலும் மயானத்திற்கு செல்லும் வழி உள்ளது. எனவே உள்ளூர் மக்கள் பயன்பாட்டிற்கு இந்த இடம் தேவை எனக் கூறி சுத்தம் செய்யும் பணியை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அங்கு வந்த திருப்பூர் தெற்கு தாசில்தார் ராஜ்குமார், பொங்கலூர் ஒன்றிய சேர்மன் வக்கீல் குமார் மற்றும் போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்து கொள்ளலாம் என்றும் வரும் திங்கட்கிழமை வரை வேலைகளை நிறுத்தி வைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. இதனை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.