உள்ளூர் செய்திகள்
காங்கேயத்தில் இருந்து அரியலூர் சிமெண்ட் ஆலைக்கு பிளாஸ்டிக் குப்பைகள் அனுப்பிவைப்பு
வீடுகளில் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம் பிரித்துக்கொடுத்தாலும், குப்பைக் கிடங்கிலும் தரம் பிரிக்கப்படுகின்றன.
காங்கயம்:
காங்கயம் நகராட்சியில் உள்ள 18 வார்டுகளில் தினசரி 11 டன் குப்பைகள் சேகரமாகின்றன. இந்த குப்பைகளை நகராட்சி தூய்மைப்பணியாளர்கள் பொதுமக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று சேகரித்து, பேட்டரி வாகனங்கள் மூலம் சென்னிமலை சாலையில் உள்ள குப்பை கிடங்குக்கு கொண்டு வருகின்றனர்.
வீடுகளில் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம் பிரித்துக் யெகாடுத்தாலும், குப்பைக் கிடங்கிலும் தரம் பிரிக்கப்படுகின்றன. இதில் தினமும் 2 டன் அளவுக்கு மறுசுழற்சிக்குப் பயன்படுத்த முடியாத பிளாஸ்டிக் குப்பைகள் சேகரமாகின்றன.
மேலும் மறுசுழற்சிக்குப் பயன்படும் வகையில் தினமும் சுமார் 500 கிலோ குப்பைகள் சேகரமாகின்றன. இதில் மறுசுழற்சிக்குப் பயன்படுத்த முடியாத பிளாஸ்டிக் குப்பைகள் வாரம்தோறும் 7 முதல் 10 டன் வரை சேகரமாகின்றன.
இந்த குப்பைகள் அரியலூரில் உள்ள சிமென்ட் ஆலைகளுக்கு எரிபொருள் பயன்பாட்டுக்கு ஏற்றி அனுப்பப்படுகின்றன.
இதுகுறித்து காங்கயம் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் எஸ்.செந்தில்குமார் கூறியதாவது:-
காங்கயம் நகராட்சி பகுதிகளில் சேகரமாகும் மறுசுழற்சிக்குப்பயன்படுத்த முடியாத பிளாஸ்டிக் குப்பைகள் அரியலூரில் உள்ள சிமென்ட் ஆலைகளுக்கு வாரம்தோறும் 7 முதல் 10 டன் வரையில் எந்தக் கட்டணமும் பெற்றுக்கொள்ளாமல் ஏற்றி அனுப்புகிறோம்.
தினமும் சேகரமாகும் மறுசுழற்சிக்குப் பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள், பால் கவர்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்து தூய்மைப்பணியாளர்கள் தினமும் ரூ.100 முதல் ரூ.150 வரை வருவாய் ஈட்டுகின்றனர் என்றார்.