உள்ளூர் செய்திகள்
அவினாசியில் ரூ.18 லட்சத்திற்கு நிலக்கடலை வர்த்தகம்
விதை தேவைக்காக ஏராளமான விவசாயிகள் நிலக்கடலை வாங்குவதால் வியாபாரிகள் அவற்றை வாங்கி விற்பனை செய்கின்றனர்.
திருப்பூர்:
அவிநாசி அருகே உள்ள சேவூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை ஏலம் நடந்தது. 480 மூட்டையில் 20 டன் நிலக்கடலையை விவசாயிகள் ஏலத்துக்கு கொண்டு வந்தனர். முதல் தர நிலக்கடலை குவின்டாலுக்கு ரூ.8,100 முதல் ரூ.8,300 வரை விற்கப்பட்டது.
இரண்டாம் தரம் ரூ.7,700 முதல் ரூ.7,950, மூன்றாம் தரம் ரூ.7,000 முதல் ரூ.7,400 வரை விற்கப்பட்டது. ஏலத்தில் 51 விவசாயிகள், 17 வியாபாரிகள் பங்கேற்றனர். ரூ.18 லட்சத்திற்கு வர்த்தகம் நடந்தது.
விற்பனைக்கூட கண்காணிப்பாளர் யுவராஜ் கூறுகையில்:
நிலக்கடலை விளைச்சல் முற்றிலும் முடிந்துவிட்ட நிலையில் விவசாயிகள் பலர் இருப்பு வைத்த நிலக்கடலையை ஏலத்துக்கு எடுத்து வந்தனர். விதை தேவைக்காக ஏராளமான விவசாயிகள் நிலக்கடலை வாங்குவதால் வியாபாரிகள் அவற்றை வாங்கி விற்பனை செய்கின்றனர்.
அதனால் தான் சீசன் முடிந்த நிலையிலும் தேவை அதிகரித்திருக்கிறது. வரும் வாரங்களில் இதன் விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என்றார்.