உள்ளூர் செய்திகள்
திருப்பூரில் வடமாநில இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு
நாராயணி ஜீனா உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் குளத்துப்புதூர் பகுதியில் ஒரு வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் வீட்டின் ஜன்னல் கதவை திறந்து பார்த்த போது உள்ளே இளம்பெண் ஒருவர் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினார். இதையடுத்து திருப்பூர் மத்திய போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது தூக்குப்போட்ட நிலையில் இறந்துகிடந்த இளம்பெண் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த நாராயணி ஜீனா என்பது தெரியவந்தது. அவரது கணவர் வீட்டில் இல்லை.
இதனால் நாராயணி ஜீனா மரணத்தில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. நாராயணி ஜீனா தற்கொலை செய்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து தலைமறைவான அவரது கணவரை தேடி வருகின்றனர். அவரிடம் விசாரணை நடத்தப்படும்பட்சத்தில் நாராயணி ஜீனா மரணம் குறித்த உண்மை தகவல் தெரியவரும். இதனிடையே நாராயணி ஜீனா உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.