வத்தலக்குண்டுவில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை
வத்தலக்குண்டு:
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் சரவணன் (வயது28). கூலித்தொழிலாளி. இவரது மனைவி குருலட்சுமி (வயது23). இவர்களுக்கு பாலசக்தி (3), விஷ்விதா (2) என 2 குழந்தைகள் இருந்தன.
சரவணன் தனது குடும்பத்துடன் பட்டிவீரன்பட்டி அருகே மருதாநதி பாலம் பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் தங்கி கூலி வேலை செய்து வந்தார்.
கடந்த சில மாதங்களாக குருலட்சுமிக்கு மனநிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவரது தாயார் முருகேஸ்வரி, சரவணன் குடும்பத்தினருடன் தங்கி இருந்தார். மேலும் அவர்களுக்கு இடையே குடும்ப பிரச்சினை இருந்தது.
இந்த நிலையில் முருகேஸ்வரி தூங்கி எழுந்தபோது மகள் மற்றும் பேரக்குழந்தைகள் மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து சரவணனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு 3 பேரையும் தேடினார். இந்த நிலையில் முருகேஸ்வரி தனது 2 குழந்தைகளையும் கிணற்றில் வீசி கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இது குறித்து பட்டிவீரன் பட்டி போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து 3 பேர் உடல்களையும் மீட்டு வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நிலக்கோட்டை டி.எஸ்.பி. சுகுமார் தலைமையில் பட்டி வீரன்பட்டி இன்ஸ்பெக்டர் சங்கரேசன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.