உள்ளூர் செய்திகள்
தென்னை உற்பத்தி மானியம் - உழவன் செயலியில் பதிவு செய்ய வேண்டுகோள்
விவசாயிகளுக்கு பசுந்தாள் உர விதைகள், போராக்ஸ் மற்றும் உயிர் உரங்களுடன் உழவு மானியமும் சேர்த்து 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட உள்ளது.
உடுமலை:
தென்னையில் உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் வகையில் தமிழக முதல்வரின் 10 ஆண்டு தொலை நோக்கு திட்டம் அறிவிக்கப்பட்டது.
அதன்படி கோவை, திருப்பூர், தஞ்சாவூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, தேனி, கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், தென்காசி, திருப்பத்தூர், மதுரை, புதுக்கோட்டை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் தென்னையில் ஒருங்கிணைந்த உர நிர்வாகம் என்ற பெயரில் இத்திட்டம் நடப்பாண்டு செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பசுந்தாள் உர விதைகள், போராக்ஸ் மற்றும் உயிர் உரங்களுடன் உழவு மானியமும் சேர்த்து 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ள விவசாயிகள் உழவன் செயலியில் முன்பதிவு செய்து முன்னுரிமை அடிப்படையில் பயன்பெறுமாறு அரசு அறிவித்துள்ளது.