உள்ளூர் செய்திகள்
அரிவாள் வெட்டு

தஞ்சையில் ரவுடிக்கு அரிவாள் வெட்டு: 2 பேர் கைது

Published On 2021-12-15 09:57 GMT   |   Update On 2021-12-15 09:57 GMT
தஞ்சையில் ரவுடிக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர்:

தஞ்சை விளார் ரோடு அண்ணா நகர் முதல் தெருவை சேர்ந்தவர் சூர்யா(வயது25). இவர் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் சூர்யா விளார் ரோட்டில் உள்ள ஒரு டீக்கடை அருகே ஆட்டோ ஸ்டாண்ட் திறந்தார். இதனை அறிந்த விளார் ரோடு இந்திரா நகரைச் சேர்ந்த லிங்கேஸ்வரன், ஹரிஹரன், நாகராஜ், சதீஸ்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று எதற்காக ஆட்டோ ஸ்டாண்ட் திறந்தீர்கள் என கேட்டு சூர்யாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதம் முற்றி லிங்கேஸ்வரன் உள்ளிட்ட 4 பேரும் சேர்ந்து சூர்யாவை அரிவாளால் வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த சூர்யாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சூர்யா கொடுத்த புகாரின் பேரில் தஞ்சை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து லிங்கேஸ்வரன், ஹரிஹரன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். நாகராஜ், சதீஷ்குமாரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News