உள்ளூர் செய்திகள்
புதர்மண்டி கிடக்கும் கொமரலிங்கம் அமராவதி ஆற்றங்கரை - பக்தர்கள் அச்சம்
பாம்புகள், விஷப்பூச்சிகள், நீர் சுழல், சகதி, ஆளை மறைக்கும் புதர்கள் இவற்றைக் கடந்து தான் ஆற்றுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது.
மடத்துக்குளம்:
மடத்துக்குளம் தாலுகா கொமரலிங்கம் அமராவதி ஆற்றங்கரையில் காசி விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது. பல நூற்றாண்டுகளாக பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இந்த கோவில் பல்வேறு சிறப்புகளை கொண்டது. இதில் குறிப்பிடத்தக்கதாக இறந்தவர்களுக்கு திதி கொடுக்கும் தலமாக இது உள்ளது.
இதனால் பல மாவட்டங்களில் இருக்கும் பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு இங்கு வந்து திதி கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த சடங்கு அமராவதி ஆற்றையும் கோவிலையும் இணைக்கும் படிக்கட்டுகளில் உள்ள காலி இடங்களில் நடக்கிறது.
இந்த சடங்கிற்குப்பின் ஆற்றில் சென்று பக்தர்கள் நீராடுவர்.ஆனால் ஆற்றுக்குச் செல்ல வேண்டிய பாதை மிக மோசமாக உள்ளது. படிக்கட்டிலிருந்து ஆறு வரை முட்புதர்கள், சகதி, பள்ளங்கள் மிகக்குறுகலான பாதை என பயன்படுத்த முடியாத அளவில் இந்த இடம் உள்ளது.
இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது:
திதி கொடுத்த பின் குளிக்கச் செல்லும் இடம் மிகவும் ஆபத்தாக உள்ளது. பாம்புகள், விஷப்பூச்சிகள், நீர் சுழல், சகதி, ஆளை மறைக்கும் புதர்கள் இவற்றைக்கடந்து தான் ஆற்றுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது.
இதனால் இங்கு திதி கொடுக்க வரும் பக்தர்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். ஆற்றுக்கு சென்று திரும்பும் பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றி சுத்தம் செய்ய பேரூராட்சி மற்றும் கோவில் நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.