உள்ளூர் செய்திகள்
பல்லடம் அருகே ஆடிட்டர் வீட்டை உடைத்து கொள்ளை
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கைரேகை, தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர்.
பல்லடம்:
பல்லடம் அருகேயுள்ள கணபதிபாளையம் ஊராட்சி வேலா அவென்யூ பகுதியில் வசிப்பவர் ஞானஸ்கந்தன்(வயது 38). ஆடிட்டர். இவரது மனைவி லலிதாம்பாள் (36). இந்த நிலையில் கடந்த 8-ந்தேதி ஞானஸ்கந்தனுடைய தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரை பார்க்க சென்னைக்கு சென்றுள்ளார்.
இதற்கிடையே அவரது மனைவி லலிதாம்பாள் கோவையில் தங்கியுள்ள பெற்றோரை பார்ப்பதற்காக வீட்டைப் பூட்டி விட்டு சென்றுள்ளார். நேற்று காலை இருவரும் வீடு திரும்பியுள்ளனர். கேட்டைத் திறந்து வீட்டின் கதவை திறக்க சென்றபோது கதவு உடைக்கப்பட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு துணிமணிகள் சிதறிக்கிடந்தன. பீரோவில் வைக்கப்பட்டிருந்த 12 பவுன் தங்க நகைகள், குத்துவிளக்கு உள்ளிட்ட வெள்ளி பொருட்கள், ரொக்கம் ரூ.8700, மற்றும் கவரிங் நகைகள் உள்ளிட்டவை திருடப்பட்டு இருந்தன.
இதையடுத்து ஞானஸ்கந்தன் பல்லடம் போலீசில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கைரேகை, தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர். மேலும் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு திருட்டு குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கணபதி பாளையம் பகுதியில் வீட்டில் ஆள் இல்லாத வீடுகளை குறிவைத்து கொள்ளையடிக்கும் கும்பல் இருந்து வருவதாகவும் அந்தப் பகுதியில் அடிக்கடி இதுபோல் நடைபெறுவதாகவும், போலீசார் ரோந்து பணி மேற்கொண்டு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.