உள்ளூர் செய்திகள்
பல்லடம் பகுதியில் காடாத்துணி உற்பத்தி பாதிப்பால் தொழிலாளர்கள் வேலை இழப்பு
பல்லடம் பகுதியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட லாரி புக்கிங் அலுவலகங்கள் உள்ளன.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் முக்கிய தொழிலாக விசைத்தறி தொழில் உள்ளது. இதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெறுகின்றனர்.
இந்த தொழிலை நம்பி உதிரிபாகங்கள் தயாரிப்பு, லாரி போக்குவரத்து போன்றவைகளும் நடை பெற்று வருகின்றன.
பல்லடம் பகுதியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட லாரி புக்கிங் அலுவலகங்கள் உள்ளன. பல்லடத்தில் உற்பத்தி செய்யப்படும் காடா துணிகளை லாரிகள் மூலம் வெளிமாநிலங்களுக்கு ஏற்றிச்செல்வார்கள்.
கடந்த சில நாட்களாக காடா துணிகள் போதிய அளவு புக்கிங் நடை பெறாததால் லாரிகள் இயங்காமல் நிறுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து லாரி உரிமையாளர்கள் கூறியதாவது:-
சாதாரண நாட்களிலேயே பல்லடத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு 100 லாரிகள் வரை செல்லும். கடந்த சில நாட்களாக காடா ஜவுளி உற்பத்தி தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தினசரி குறைந்த லாரிகள் மட்டுமே புக்கிங் ஆகிறது.
இதனால் லாரிகள் இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. லாரிக்கு பாரம் ஏற்றும் தொழிலாளர்களும் வேலை வாய்ப்பு இழந்துள்ளனர். காடா ஜவுளி உற்பத்தி தொழில் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பினால் தான் லாரிகள் மீண்டும் முழுமையாக இயங்கும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.