உள்ளூர் செய்திகள்
கனிமவள கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுத்த அரசு அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்வதா?- சீமான் கண்டனம்
மண்ணின் வளங்களை காக்க வேண்டிய அரசே கொள்ளையர்களுக்கு ஆதரவாக நின்று, நேர்மையாக செயல்படும் அரசு அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து பந்தாடுவது வன்மையான கண்டனத்திற்குரியது.
சென்னை:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நெல்லை மாவட்டத்திலுள்ள கல்குவாரிகளிலிருந்து முறைகேடாக கற்களை வெட்டி, கேரளாவுக்கு கடத்திய கனிமவள கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுத்த சப்-கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை இடமாற்றம் செய்துள்ள தி.மு.க. அரசின் செயல்பாடு அதிர்ச்சியளிக்கிறது.
மண்ணின் வளங்களை காக்க வேண்டிய அரசே கொள்ளையர்களுக்கு ஆதரவாக நின்று, நேர்மையாக செயல்படும் அரசு அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து பந்தாடுவது வன்மையான கண்டனத்திற்குரியது.கனிமவள கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதற்காக விரைவில் நெல்லை மாவட்ட கலெக்டரையும் மாற்றவிருப்பதாக வெளியாகும் செய்திகள் தி.மு.க. அரசின் இழிநிலையையே காட்டுகிறது.
எனவே அரசு அதிகாரிகள் மீது எடுக்கப்பட்டுள்ள பணியிடமாற்ற நடவடிக்கைகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.