உள்ளூர் செய்திகள்
மழையால் தொழில் பாதிப்பு - அரசு நிவாரணம் வழங்க செங்கல்சூளை தொழிலாளர்கள் கோரிக்கை
இரண்டு மாதமாக தொடர் மழையால் வேலையின்றி குடும்பம் நடத்தவே சிரமமாக உள்ளது.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் நகராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட செங்கல் சூளையில் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த இரண்டு மாதமாக தொடர் மழை காரணமாக செம்மண் மற்றும் களிமண் கலந்த கலவையிலான செங்கல் அச்சில் கற்கள் அறுக்க முடியவில்லை.
தயாரிக்கப்பட்ட கற்களை சுத்தம் செய்து 7 நாட்கள் வெயிலில் காய வைத்து பின்னர் சூளையில் அடுக்க வேண்டும். வெயில் அதிகமாக இல்லாததால் கற்கள் காயவைக்க முடியவில்லை. இதனால் சூளை வைப்பதில் மாதக்கணக்கில் இழுபறி ஏற்படுகிறது.
இதுகுறித்து தொழிலாளர்கள் கூறியதாவது:
செங்கல் அறுக்கும் தொழிலில் வேலை பார்த்து வருகிறோம். இரண்டு மாதமாக தொடர் மழையால் வேலையின்றி குடும்பம் நடத்தவே சிரமமாக உள்ளது. எனவே எங்களுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்க உள்ளோம் என்றனர்.