உள்ளூர் செய்திகள்
வெல்லம் தயாரிப்பில் விதிமீறல் இருந்தால் புகார் தெரிவிக்கலாம்-அதிகாரி அறிவிப்பு
வெல்லம் தயாரிப்பில் விதிமீறல் இருப்பது தெரியவந்தால், உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் மீது கடும் நடவடிக்கை பாயும்.
திருப்பூர்:
தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெல்லம் உற்பத்தி தொடங்கியுள்ளது. கவர்ச்சியான நிறத்தில், வெல்லம் தயாரிக்க வேண்டுமென நினைத்து சிலவகை ரசாயனங்கள் கலக்கப்படுவதாக புகார் வந்துள்ளது.
அத்துடன் வெளிர் மஞ்சள் நிறத்தில் வெல்லம் இருக்க வேண்டுமென அஸ்கா சர்க்கரை மற்றும் மைதா மாவு கலப்பதாகவும் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் விஜய லலிதாம்பிகை கூறியதாவது:-
பொங்கல் மற்றும் இனிப்பு தயாரிக்க பயன்படுத்தப்படும், வெல்லம் அடர் பழுப்பு நிறத்தில் இருக்க வேண்டும். மாறாக, வெளிர் மஞ்சள் நிறம், ஆரஞ்சு நிறத்தில் இருக்க கூடாது. கரும்பு சாற்றை காய்ச்சி எடுக்கும் போது அடர் பழுப்பு நிறத்தில் வெல்லம் இருக்கும்.
கவர்ச்சியான நிறம் வேண்டும் என்பதற்காக, அஸ்கா சர்க்கரை, மைதா மாவு கலக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாது, சோடியம் பை சல்பேட், கால்சியம் கார்பனேட், சல்பர் டை ஆக்சைடு, சூப்பர் பாஸ்பேட் போன்ற ரசாயண பொருட்களும் கலக்கப்படுகிறது.
வெல்லம் தயாரிப்பில் விதிமீறல் இருப்பது தெரியவந்தால், உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் மீது கடும் நடவடிக்கை பாயும். பொதுமக்கள் பழுப்பு நிறத்தில் உள்ள வெல்லத்தை மட்டுமே பயன்படுத்தலாம்.
வியாபாரிகள் தரமற்ற வெல்லத்தை வாங்கி விற்கக்கூடாது.உணவு பொருட்களின் தரம் குறைந்திருந்தால் 94440 42322 என்ற ‘வாட்ஸ் ஆப்’ எண்ணில் புகார் செய்யலாம்.இவ்வாறு அவர் கூறினார்.