செய்திகள்
பி.ஏ.பி., பாசன நீர் வீணாவதை தடுக்க குளம், குட்டைகளுக்கு தண்ணீரை பாய்ச்ச வேண்டும் - விவசாயிகள் எதிர்பார்ப்பு
தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ள நிலையில் விவசாயத்துக்கு தேவையான தண்ணீர் கிடைத்துள்ளது.
திருப்பூர்:
காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இது பருவகாலம் என்பதால் விவசாயிகளுக்கு போதிய தண்ணீர் கிடைத்துள்ளது. இதற்கிடையே பாசன நீரும் பி.ஏ.பி.,யில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
இதை குளம் குட்டைகளில் சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ள நிலையில் விவசாயத்துக்கு தேவையான தண்ணீர் கிடைத்துள்ளது. இதற்கிடையே திருமூர்த்தி அணையிலிருந்தும் பி.ஏ.பி.,க்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தொடர் மழையால் விவசாய கிணறுகள் நிரம்பி போதிய தண்ணீர் கிடைத்துள்ளதால் பெரும்பாலான விவசாயிகள் பாசன நீரை பயன்படுத்த இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.
பி.ஏ.பி., நீரை அந்தந்த பகுதி குளம் குட்டைகளில் சேகரித்து வைப்பதன் மூலம் எதிர்வரும் கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு நீங்க வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து விவசாய சங்க பிரதிநிதிகள், பாசன சபை நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.