செய்திகள்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழக அமைச்சரவை கூட்டம் சனிக்கிழமைக்கு ஒத்திவைப்பு

Published On 2021-11-18 06:29 GMT   |   Update On 2021-11-18 08:54 GMT
வரும் 19-ம் தேதி அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
சென்னை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், டெல்டா மாவட்டங்கள் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு வாரங்களில் பெய்த கனமழையால் பல்வேறு மாவட்டங்களில் வெள்ள சேதம் ஏற்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் சேதமான பயிர்களுக்கு நிவாரணம் அறிவித்தார்.

இந்நிலையில், வரும் 19-ம் தேதி அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், கனமழை எச்சரிக்கை மற்றும் அமைச்சர்கள் நிவாரண பணிகளில் ஈடுபட முதல்வர் உத்தரவிட்டுள்ளதை அடுத்து, தமிழக அமைச்சரவை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழக அரசின் அமைச்சரவைக் கூட்டம் நாளை (19-ந்தேதி) மாலை 5 மணியளவில் கூட்டப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது தமிழகத்தின் சில மாவட்டங்களுக்கு மிக கன மழை எச்சரிக்கை வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி மாவட்டங்களில் அமைச்சர்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பணித்துள்ளார். இதன் காரணமாக நாளை நடைபெறவிருந்த அமைச்சரவைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு வருகிற 20.11.2021 (சனிக்கிமை) மாலை 6 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News