செய்திகள்
மழை நேரங்களில் மின்பழுதுகளை சரிசெய்யும் போது கவனமாக இருக்க வேண்டும்-அதிகாரிகள் அறிவுறுத்தல்
பருவமழை காலத்தில் மின் பழுது நீக்க மின்கம்பங்களில் ஏறும் மின்வாரிய ஊழியர்கள் மின்சாரம் தாக்கி பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டத்தில் பருவமழை காரணமாக அவ்வப்போது மின்சப்ளையில் தடங்கல் ஏற்படுகிறது. காற்று பலமாக வீசும் போதும், இடியுடன் கூடிய மழை பெய்யும் போதும் மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்களில் பழுது ஏற்படுகிறது.
இதனால் அதனை சீரமைக்கும்போது வயர்மேன்கள், போர்மேன்கள் மற்றும் உதவி பொறியாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-
பருவமழை காலத்தில் மின் பழுது நீக்க மின்கம்பங்களில் ஏறும் மின்வாரிய ஊழியர்கள் மின்சாரம் தாக்கி பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
எனவே மின்வாரிய பணியாளர்கள், மின்கம்பங்கள் மற்றும் டிரான்ஸ்பார்மர்களில் பழுது நீக்க முயற்சிக்கும் போது சம்பந்தப்பட்ட துணை மின்நிலையத்தில் உள்ள ஆப்பரேட்டர்களிடம் தெளிவாக பேசி மின்சப்ளையை நிறுத்தியதை உறுதி செய்த பிறகே அந்தந்த கம்பங்களில் ஏறிபழுது நீக்க அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.
இரவு நேரங்களில் உரிய உதவியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் ஆலோசனையின்றி பழுது நீக்க பணிகள் செய்யக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.