செய்திகள்
அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதை காணலாம்

கனமழை எச்சரிக்கை- அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை

Published On 2021-11-16 04:08 GMT   |   Update On 2021-11-16 04:08 GMT
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்து உள்ளனர்.
வால்பாறை:

கேரள மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. அத்துடன் அங்குள்ள திருச்சூர் மாவட்டத்தில் ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்டு உள்ளது. கனமழை காரணமாக சாலக் குடியில் இருக்கும் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் செந்நிறத்தில் வெள்ளம் பாய்ந்து செல்கிறது.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதிக்கு சுற்றுலா செல்பவர்கள் சோலையாறு அணை அருகே உள்ள மளுக்கப்பாறை பகுதியில் இருந்து சாலக்குடிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று வருகிறார்கள்.

தற்போது அங்கு தீவிரமாக மழை பெய்து வருவதால், நீர் வீழ்ச்சிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு 2 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக நேற்று முன்தினம் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் அனுமதிக்கவில்லை. இதனால் அவர்கள் சாலையின் ஓரத்தில் நின்று நீர்வீழ்ச்சியை பார்த்து ரசித்ததுடன், புகைப்படம் எடுத்துச்சென்றனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, கனமழை காரணமாக அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி பகுதிக்கு சுற்றுலா பயணிகள் யாரும் செல்ல வேண்டாம். வால்பாறை வழியாக செல்வதை தடுக்க மளுக்கப்பாறை சோதனை சாவடியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். தடையை மீறி சென்றால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
Tags:    

Similar News