செய்திகள்
கோப்புபடம்

மாணவர் சேர்க்கை அதிகரிப்பால் அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் அமைக்க கோரிக்கை

Published On 2021-11-12 04:48 GMT   |   Update On 2021-11-12 04:48 GMT
பழனியாண்டவர் நகர் நகராட்சி பள்ளியில் எல்.கே.ஜி., முதல் 8ம் வகுப்பு வரை பாடம் கற்பிக்கப்படுகிறது.
உடுமலை:

கொரோனா காரணமாக உடுமலை கல்வி மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்த முடியாத பெற்றோர் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்துள்ளனர்.

அவ்வகையில் வழக்கத்துக்கு மாறாக, கணக்கம்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 300 பேர், சின்னவீரன்பட்டி ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் 200 பேர், சிவசக்திகாலனி ஊராட்சி தொடக்கப்பள்ளியில் 70 பேர், யு.கே.பி., நகராட்சி தொடக்கப்பள்ளியில் 50 பேர், பழனியாண்டவர் நகர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 320 பேர் என மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.

அதில் பழனியாண்டவர் நகர் நகராட்சி பள்ளியில் எல்.கே.ஜி., முதல் 8ம் வகுப்பு வரை பாடம் கற்பிக்கப்படுகிறது. குறிப்பாக 6ம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வியும் உள்ளது. இங்கு வழக்கமாக ஒவ்வொரு கல்வியாண்டும் 140க்கும் குறைவாகவே மாணவர்கள் எண்ணிக்கை காணப்படும். 

ஆனால் நடப்பு கல்வியாண்டு 180 மாணவர்கள் பள்ளியில் சேர்ந்துள்ளனர். தற்போது நேரடி வகுப்புகள் தொடங்கி உள்ளதால் மாணவர்கள் அமர்ந்து படிக்கும் வகையில் வகுப்பறைகள் கிடையாது.

தற்போது 5 வகுப்பறைகள் மட்டுமே உள்ளதால் சுழற்சி முறையில் மாணவர்கள் பள்ளிக்கு வரவழைக்கப்படுகின்றனர். கூடுதலாக 4 வகுப்பறைகள் கட்ட நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தும் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளது. 

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

பள்ளி வளாகத்தில் கூடுதல் கட்டிடம் கட்ட இடவசதி இல்லை. அதற்கு மாறாக தற்போதுள்ள கட்டிடத்தில் முதல் தளத்தில் 4 வகுப்பறைகள் அமைக்க முடியும். இதற்கு துறை ரீதியான அதிகாரிகள் ஒப்புதலும் அளித்துள்ளனர். 

மாணவர் நலன் கருதி கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து பள்ளிக்கு தேவையான வகுப்பறைகளை உடனடியாக அமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News