செய்திகள்
பண மோசடி

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.50 லட்சம் மோசடி - டிராவல்ஸ் உரிமையாளர் கைது

Published On 2021-11-05 13:13 GMT   |   Update On 2021-11-05 13:13 GMT
கோவையில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.50 லட்சம் மோசடி செய்த டிராவல்ஸ் உரிமையாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் லோகேஷ் அரவிந்த் (வயது 28). இவர் வேலை வாங்கி கொடுக்கும் புரோக்கர் வேலை செய்து வருகிறார்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவருக்கு மேட்டுப்பாளையம் தாசனூரை சேர்ந்த மோகன் (30) என்பவரது பழக்கம் கிடைத்தது.

அவர் லோகேஷ் அரவிந்த்திடம் தனது உறவினர் கோவை மாவட்ட அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தில் அதிகாரியாக வேலை பார்ப்பதாக தெரிவித்தார். மேலும் வேளாண்துறையில் அலுவலக உதவியாளர் போன்ற பணிகள் ரூ.30 ஆயிரம் ரூ.60 வரை சம்பளத்துடன் காலியாக இருப்பதாகவும், பணம் கொடுத்தால் உறவினரிடம் கூறி வேலை பெற்று கொடுக்கலாம் என ஆசை வார்த்தை கூறினார்.

இதனை உண்மை என நம்பிய லோகேஷ் அரவிந்த் தன்னிடம் வேலை கேட்டு வந்த 18 பேரிடம் இருந்து ரூ.50 லட்சம் பணத்தை பெற்று மோகனிடம் கொடுத்தார்.

பணத்தை பெற்றுக்கொண்ட மோகன் போலியாக ஆவணங்கள் தயாரித்து வேலைக்கான ஆணை என பணம் கொடுத்தவர்களிடம் கொடுத்தார். அவர்கள் ஆவணத்துடன் வேலைக்கு சென்ற போது அது போலியானது என்பது தெரிய வந்தது. இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் புரோக்கர் லோகேஷ் அரவிந்திடம் கேட்டனர்.

அவர் இது குறித்து கோவை மாவட்ட குற்றப்பிரிவில் புகார் செய்தார். புகாரின் பேரில் டி.எஸ்.பி. சேகர் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் வேலை வாங்கி தருவதாக கூறி போலி ஆவணங்களை கொடுத்து மோசடி செய்த மோகனை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

பணக்காரராக ஆக வேண்டும் என்ற ஆசையில் குறுக்கு வழியில் சென்று சம்பாதிக்க திட்டமிட்டேன். அதன்படி ஏமாற்றி ரூ.50 லட்சம் பெற்றுக் கொண்டு போலி ஆவணங்கள் கொடுத்தேன்.

அந்த பணத்தில் டிராவல்ஸ் நிறுவனத்தை தொடங்கினேன். 2 கார்களை வாங்கி தொழில் செய்து கொண்டு இருந்தேன். மோசடி பணத்தை என் மனைவி மற்றும் தாய் வங்கி கணக்கில் போட்டு செலவு செய்து வந்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் போலீசார் மோகனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News