செய்திகள்
கொள்ளை

ஜேடர்பாளையம் அருகே துணி வியாபாரி வீட்டில் 2 பவுன் நகை, பணம் திருட்டு

Published On 2021-11-01 09:48 GMT   |   Update On 2021-11-01 09:48 GMT
ஜேடர்பாளையம் அருகே துணி வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 2 பவுன் நகை, ரூ.5 ஆயிரத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அருகே உள்ள ஆனங்கூரை சேர்ந்தவர் பிரபு (வயது 30). துணி வியாபாரி. இவருடைய மனைவி லாவண்யா. தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் துணி வியாபாரம் செய்வதற்காக பிரபு வெளியூர் சென்று சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

கணவர் வெளியூர் சென்று விட்டதால் லாவண்யா அதே ஊரில் உள்ள அவருடைய மாமியார் வீட்டிற்கு நேற்று முன்தினம் இரவு சென்றார். இந்தநிலையில் நேற்று காலை மாமியார் வீட்டில் இருந்து வீட்டிற்கு வந்த லாவண்யா வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர்.

பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 2 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் பூட்டை உடைத்து பணம் மற்றும் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News