செய்திகள்
முககவசம்

முககவசம் அணியாத 87,750 பேரிடம் இருந்து ரூ.1¾ கோடி அபராதம் வசூல்

Published On 2021-10-29 13:33 GMT   |   Update On 2021-10-29 13:33 GMT
திருச்சி மாநகரில் கடந்த 6 மாதங்களில் முககவசம் அணியாத 87,750 பேரிடம் இருந்து ரூ.1¾ கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
திருச்சி:

கொரோனா பரவலை தடுக்க முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தமிழக அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது. ஆனால் பொதுமக்கள் அவற்றை முறையாக கடைப்பிடிப்பதில்லை. திருச்சி மாவட்டத்தில் கொரோனா பரவல் சற்று கட்டுக்குள் உள்ளது.

இருப்பினும், தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியே செல்லத் தொடங்கி விட்டனர்.

முக்கிய கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இது போன்ற இடங்களில் அரசு அறிவித்துள்ள கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. கொரோனாவுக்கு எதிராக முக்கிய உயிர்க்கவசமாக முககவசம் இருந்து வருகிறது.

ஆனாலும் பலர் முககவசம் அணிந்து வந்தாலும், அவற்றை முறையாக அணிவதில்லை. இதனால் முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணியில் காவல் துறையினரும் மாநகர போலீசாரும், திருச்சி மாநகராட்சி நிர்வாகமும் தீவிரம் காட்டி வருகிறது. கடந்த 6 மாதங்களில் திருச்சி மாநகரில் முககவசம் அணியாத 87,750 பேரிடம் இருந்து மாநகர போலீசார் ரூ.1 கோடியே 75 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் வசூல் செய்துள்ளனர்.

மாநகர போலீசார் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், வாகனங்களில் செல்பவர்களையும் மறித்து சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக நேற்று கே.கே.நகர் சாலை, பெரியகடை வீதி, என்.எஸ்.பி. சாலை என்று பல்வேறு இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
Tags:    

Similar News