செய்திகள்
பல்லடம் அருகே புகையிலை பொருட்கள் கடத்திய 3 பேர் கைது
உகாயனூர் ரோட்டில் நின்று கொண்டிருந்த காரை சோதனையிட்டபோது அதில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள கணபதி பாளையம் ஊராட்சி கள்ளிமேடு அருகே காரில் புகையிலைப் பொருட்கள் கடத்துவதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடம் சென்ற போலீசார் அங்குள்ள கணபதிபாளையம் - உகாயனூர் ரோட்டில் நின்று கொண்டிருந்த காரை சோதனையிட்டபோது அதில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அங்கிருந்த 3 நபர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
அதில் அவர்கள் கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்த கபூராம் மகன் பரத் (24) மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த துராராம் மகன் அம்ராராம் (21) மற்றும் பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஏ.பி. நகரில் வசிக்கும் தூத்துக்குடி மாவட்டம் மேல காட்டான் குளத்தைச் சேர்ந்த சித்திரவேல் மகன் வேல்முருகன் (33) என்பதும், இவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா போன்ற புகையிலைப் பொருட்களை கடத்தி விற்பனை செய்வதும் தெரிய வந்தது.
இதையடுத்து சுமார் ரூ.1.5லட்சம் மதிப்புள்ள 140 கிலோ புகையிலைப் பொருட்கள், 1 கார், 1 மோட்டார் சைக்கிள், ரொக்கம் ரூ.2,20,300 ஆகியவற்றை பறிமுதல் செய்னர். மேலும் 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.