செய்திகள்
சசிகலா

தஞ்சை, மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் சசிகலா சுற்றுப்பயணம்

Published On 2021-10-24 02:25 GMT   |   Update On 2021-10-24 02:25 GMT
சசிகலா செல்லும் இடங்களில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படும் என்று டி.டி.வி.தினகரன் தலைமையிலான அ.ம.மு.க. அறிவித்துள்ளது.
சென்னை:

சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துவிட்டு வெளியே வந்த சசிகலா, கடந்த 16-ந் தேதி எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடங்களிலும், 17-ந் தேதி தியாகராயநகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்திலும், ராமாபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். தோட்டத்துக்கும் சென்று மரியாதை செலுத்தினார்.

இந்த நிலையில் அடுத்த வாரம் தஞ்சை, மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் சசிகலா சுற்றுப்பயணம் செல்ல உள்ளார். தஞ்சையில் வருகிற 27-ந் தேதி நடக்கும் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். பின்னர் அங்கிருந்து 28-ந் தேதி மதுரைக்கு செல்கிறார். அங்கு, பல்வேறு நிகழ்ச்சிகளில் சசிகலா கலந்துகொள்கிறார்.

29-ந் தேதி ராமநாதபுரம் செல்லும் அவர், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்துகிறார்.

இதையடுத்து பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள இருக்கிறார். சசிகலா செல்லும் இடங்களில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படும் என்று டி.டி.வி.தினகரன் தலைமையிலான அ.ம.மு.க. அறிவித்துள்ளது.



இதுகுறித்து டி.டி.வி.தினகரன் கூறும்போது, “அ.தி.மு.க.வை மீட்க சசிகலா சரியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தனது சொந்த முயற்சியால் அ.தி.மு.க.வை மீண்டும் வலிமைப்படுத்தும் திட்டங்களை அவர் கையில் எடுத்திருக்கிறார்.

எனவே எங்கள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சசிகலாவுக்கு முழுமையான ஆதரவை கொடுப்பார்கள். சசிகலா எந்த ஊருக்கு, எப்போது சென்றாலும் அ.ம.மு.க. தொண்டர்கள் அவரை வரவேற்பார்கள்” என்றார்.

இதையும் படியுங்கள்...
Tags:    

Similar News