செய்திகள்
பள்ளிகளில் 1 முதல் 8 வரை சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தலாம் -கடைகளுக்கு நேரக்கட்டுப்பாடு தளர்வு
கூட்ட அரங்குகளில் அனைத்து வகை கலாச்சார நிகழ்வுகள் நடத்த நவம்பர் 1ம் தேதி முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.
சென்னை
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நவம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
அனைத்து வகை கடைகள், உணவகங்கள், பேக்கரிகளுக்கு இரவு 11 மணி வரை விதிக்கப்பட்டிருந்த நேர கட்டுப்பாடுகள் இன்று முதல் தளர்த்தப்படுகின்றன. அனைத்து வகை உள், வெளி விளையாட்டு அரங்குகளில் பயிற்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படுகிறது. சிகிச்சை தேவைகளுக்காக நீச்சல் குளங்களை பயன்படுத்த இன்று முதல் அனுமதிக்கப்படுகிறது.
நவம்பர் 1ம் தேதி முதல் பின்வரும் செயல்பாடுகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது:
* அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 8 வரை உள்ள வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்த அனுமதி
* கூட்ட அரங்குகளில் அனைத்து வகை கலாச்சார நிகழ்வுகள் நடத்த அனுமதி
* ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள மதுக்கூடங்களுடன் அனைத்து வகை தனித்து இயங்கும் மதுக்கூடங்களும் செயல்பட அனுமதி
* மாவட்டத்திற்குள்ளேயும், மாவட்டங்களுக்கிடையேயும், மாநிலங்களுக்கிடையேயும் (கேரளா தவிர) சாதாரண மற்றும் குளிர்சாதன பேருந்துகளில் 100 சதவீத இருக்கைகளில் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி
* அரசு பயிற்சி நிலையங்கள், மையங்கள் 100 சதவீத பயிற்சியாளர்களுடன் செயல்பட அனுமதி
* ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.
* திருவிழாக்கள் மற்றும் அரசியல் நிகழ்வுகளுக்கு நடைமுறையில் உள்ள தடை தொடரும்.
இவ்வாறு முதல்வர் கூறி உள்ளார்.