செய்திகள்
திருப்பூரில் மோட்டார் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ஆட்டோ, கார், வேன் உள்ளிட்ட மோட்டார் வாகன தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் அபரிமிதமான பெட்ரோல்-டீசல் விலை உயர்வை உடனே கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. தனியார் மோட்டார் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டம் கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று நடைபெற்றது.
இதில் ஆட்டோ, கார், வேன் உள்ளிட்ட மோட்டார் வாகன தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் அபரிமிதமான பெட்ரோல்-டீசல் விலை உயர்வை உடனே கட்டுப்படுத்த வேண்டும்.
ஒன்றிய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்தின் மூலமாக கடுமையான நிபந்தனைகளை விதித்து ரூ.5000, ரூ.10000, ரூ.20000 என அதிக அளவில்அபராத தொகை வசூலிப்பதை கைவிட வேண்டும். எப்.சி.காலங்களில் மோட்டார் வாகன ஓட்டுனர்களுக்கு ரூ.10000 நிதி உதவி வழங்க வேண்டும்.
ஆட்டோ ஓட்டுனர்களின் ரத்தத்தை உறிஞ்சும் கார்ப்பரேட் நிறுவனங்களை விரட்ட தமிழக அரசே ஒரு செல்போன்செயலி ஏற்படுத்தி ஆட்டோ தொழிலாளர்களுக்கு உதவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் ரவி, பழனிசாமி, நடராஜன், சேகர், சசிகுமார், மகேந்திரகுமார், சக்திவேல், சிவசுப்பிரமணி, கடவுள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.