செய்திகள்
உறவினர்கள் சாலை மறியல்

விஷம் குடித்து வாலிபர் பலி: தற்கொலைக்கு தூண்டியதாக 3 பேர் கைது - உறவினர்கள் சாலை மறியல்

Published On 2021-10-20 12:22 GMT   |   Update On 2021-10-20 12:22 GMT
வாலிபர் மீது திருட்டு பலி சுமத்தி தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பிரபாகரனின் உறவினர்கள் மற்றும் ஆதித்தமிழர் பேரவையினர் கொடைக்கானல் அரசு மருத்துவமனை எதிரே மறியலில் ஈடுபட்டனர்.
கொடைக்கானல்:

கொடைக்கானல் அருகே உள்ள மன்னவனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கூம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். அவருடைய மகன் பிரபாகரன் (வயது 18). 8-ம் வகுப்பு வரை படித்துள்ள இவர், தனது தந்தைக்கு உதவியாக விவசாயத்தில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் மாலை இவர், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்தநிலையில் தனது மகன் மீது திருட்டு பழி சுமத்தி தாக்கியதால், அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும், அவரை தற்கொலைக்கு தூண்டிய 6 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரபாகரனின் தந்தை கொடைக்கானல் போலீசில் புகார் கொடுத்தார்.

மேலும் தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பிரபாகரனின் உறவினர்கள் மற்றும் ஆதித்தமிழர் பேரவையினர் கொடைக்கானல் அரசு மருத்துவமனை எதிரே மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன், இன்ஸ்பெக்டர் முத்து பிரேம்சந்த் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போக செய்தனர். இதற்கிடையே பிரபாகரனை தற்கொலைக்கு தூண்டியதாக அதே கிராமத்தை சேர்ந்த ராமர், பழனியப்பன், முத்துசாமி என்ற செல்வம் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News