செய்திகள்
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆஜராக லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சம்மன்
அ.தி.மு.க. ஆட்சியின்போது போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டில் கடந்த ஜூலை மாதம் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியிருந்தது.
அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர். விஜயபாஸ்கர். 2016 ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் கரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, போக்குவரத்துத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2021 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜியிடம் தோல்வி அடைந்தார்.
இவர் மீது ஏற்கனவே பல்வேறு ஊழல் புகார்கள் இருந்து வந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் எம்.ஆர். விஜயபாஸ்கர், அமைச்சராக இருந்தபோது கோடிக்கணக்கில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை வாங்கி குவித்ததாக எழுந்த புகாரின்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஜூலை 22-ந்தேதி இவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர்.
விஜயபாஸ்கருக்கு சொந்தமான கரூரில் 20 இடங்களிலும் சென்னையில் ஒரு இடத்திலும் சோதனை நடத்தப்பட்டது. சோதனையின்போது ஏராளமான பணம் மற்றும் நகைகள், ஆவனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
சோதனை தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. உள்ளாட்சி தேர்தல், அதனையொட்டி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. இந்த பணியில் ஈடுபட இருப்பதால் செப்டம்பர் 30-ந்தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக முடியாது என எம்.ஆர். விஜயபாஸ்கர் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில் வரும் 25-ந்தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி மீண்டும் லஞ்சம் ஒழிப்புத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.