செய்திகள்
டாஸ்மாக் வருமானத்தில் 25 சதவீத நிதியை கிராம ஊராட்சிக்கு ஒதுக்க வேண்டும் - சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தல்
சுற்றுச்சூழல் சீர்கேட்டை தடுக்கவும், மரம் வளர்த்தல் உள்ளிட்ட பசுமை பணிகளை மேற்கொண்டு இயற்கையை மீட்டெடுக்க இந்த நிதி உதவும்.
பல்லடம்:
டாஸ்மாக் வருமானத்தில் 25 சதவீத நிதியை கிராம ஊராட்சிகளுக்கு வழங்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கோடங்கிபாளையத்தை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத்துக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
பல்லடம் பகுதியில் உள்ள பல்வேறு கிராம ஊராட்சி பகுதிகளில் டாஸ்மாக் கடைகளுக்கு வரும் குடிமகன்களால் அவர்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் டம்ளர்கள், பாலிதீன் பைகள், பாட்டில்கள் உள்ளிட்டவை அப்படியே வீசப்பட்டு சுற்றுச்சூழல் கெடுகிறது.
மேலும் அவைகளால் விளைநிலங்கள் பாதிக்கப்படுகிறது. எனவே டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருமானத்தில் 25 சதவீத நிதியை அந்தந்த கிராம ஊராட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதன் மூலம் சுற்றுச்சூழல் சீர்கேட்டை தடுக்கவும், மரம் வளர்த்தல் உள்ளிட்ட பசுமை பணிகளை மேற்கொண்டு இயற்கையை மீட்டெடுக்க இந்த நிதி உதவும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.