செய்திகள்
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவித் தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியை சேர்ந்த தாழ்த்தப்பட்ட அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த விஜய் மற்றும் அவரது நண்பர் தண்டபாணி இருவரும் பாலாறு துறை அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களது இரு சக்கர வாகனத்தை மறித்த 3 பேர் அவர்கள் ஜாதியின் பெயரை கேட்டு இழிவுபடுத்தி தாக்கி உள்ளனர் .
இதில் காயமடைந்த இருவரும் கோளார்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை பெற்று பின்னர் பொள்ளாச்சி அரசு மருத்துவனைக்கு மேல்சிகிச்சைக்காக சென்றனர். பின்னர் சம்பவம் குறித்து தளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த புகாரின் பேரில் கடந்த 5-ந் தேதி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது .
ஆனால் 10 நாட்களுக்கு மேலாகியும் குற்றவாளிகள் கைது செய்யப்படாததால் இன்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவித் தொகை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.