செய்திகள்
கலைப் போட்டிகளில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு
போட்டியில் அரசு மற்றும் உதவி பெறும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 9 முதல் பிளஸ்-2 வரையிலான மாணவர்கள் பங்கேற்கலாம்.
திருப்பூர்:
இடைநிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர்களின் படைப்பாற்றலை வளர்க்கவும், பாரம்பரிய கலைகளை 2 உயிர்ப்புடன் வைத்திருக்கவும் கல்வித்துறை சார்பில் ‘கலா உற்சவ்’ போட்டிகள் மாவட்ட மற்றும் தேசிய அளவில் நடத்தப்பட்டு வருகிறது.
அவ்வகையில் நடப்பாண்டு போட்டி ஆன்லைனில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வாய்ப்பாட்டு, இசைக்கருவி வாசித்தல், பாரம்பரிய நாட்டுப்புற வகை நடனம், உள்ளூர் தொன்மையான பொம்மைகள், விளையாட்டுகள், இரு மற்றும் முப்பரிமாண காண்கலை ஓவியங்கள், கைவினைப்பொருட்கள் என பல தலைப்புகளின் கீழ் நடக்கிறது.
இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளானது, அரசு மற்றும் உதவி பெறும், தனியார் பள்ளிகளில் படிக்கும் 9 முதல் பிளஸ்-2 வரையிலான மாணவர்கள் பங்கேற்கலாம். போட்டிகள் முதலில் மாவட்ட அளவில் நடத்தப்படும்.
பள்ளி, மாவட்ட அளவிலான போட்டிகளை அந்தந்த மாவட்டங்கள் அவரவர் வசதிக்கேற்ப நேரடியாகவோ, ஆன்லைன் மூலமாகவோ நடத்தி கொள்ளலாம். மாநில அளவிலான போட்டிகள் நேரடியாக சேலம் மாவட்டத்தில் நடக்க உள்ளது.
தேசிய அளவிலான போட்டிகள் முழுவதும் ஆன்லைன் முறையில் நேரலையாக நடத்தப்படும். பள்ளி மற்றும் மாவட்ட அளவில் போட்டிகள் நடத்த ஒரு கல்வி மாவட்டத்திற்கு ரூ.5 ஆயிரம் வீதம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 8-ந் தேதிக்குள் போட்டிகள் நடத்தி தகுதியான மாணவ, மாணவிகள் பட்டியலை அனுப்ப வேண்டும்.
தேசிய அளவிலான போட்டிகளுக்கு பதிவுகளை, டிசம்பர் 10-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஆர்வமுள்ள மாணவர்கள் தங்கள் பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.