செய்திகள்
அரிவாள் வெட்டு

ஆனைமலையில் குடிபோதையில் திட்டிய வாலிபருக்கு அரிவாள் வெட்டு

Published On 2021-10-16 10:09 GMT   |   Update On 2021-10-16 10:09 GMT
ஆனைமலையில் குடிபோதையில் திட்டிய வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

கோவை மாவட்டம் ஆனைமலை சேத்துமடையைச் சேர்ந்தவர் ஜேசுதாஸ் (வயது 24). கூலித்தொழிலாளி. இவரது நண்பர் அமர் (20). சம்பவத்தன்று இவர்கள் அண்ணா நகர் பகுதியில் உள்ள ஒரு கோவில் முன்பு மது குடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அமர் ஜேசுதாசின் செல்போனை எடுத்து அதே பகுதியை சேர்ந்த மதன்குமார்(30) என்பவருக்கு போன் செய்து தகாதவார்த்தைகளால் திட்டி போனை துண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த மதன் குமார் தனது நண்பர் உதயகுமார் என்பவரை அழைத்து கொண்டு சம்பவ இடத்துக்கு சென்றார்.

அங்கு ஜேசுதாஸ் மற்றும் அமரிடம் எதற்காக போன் செய்து தகாத வார்த்தையால் திட்டினீர்கள் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மதன் குமார் மற்றும் உதயகுமார் அங்கு இருந்த அரிவாளை எடுத்து ஜேசுதாசை வெட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதில் பலத்த காயமடைந்த ஜேசுதாசை அங்கிருந்தவர்கள் மீட்டு வேட்டைக்காரன்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் இதுகுறித்து ஜேசுதாஸ் ஆனைமலை போலீசில் புகார் தெரிவித்தார். இதைப்போன்று மதன் குமார், ஜேசுதாஸ் மற்றும் அமர் தாக்கியதாக புகார் தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News