செய்திகள்
புரட்டாசியில் பெய்த தொடர் மழை காரணமாக செடிகளில் தக்காளி அழுகி வருகிறது. இதனால் உற்பத்தி இழப்பு ஏற்பட்டது.
மங்கலம்:
திருப்பூர் மாவட்டத்தில் வைகாசி பட்டத்தில் சாகுபடி செய்த தக்காளி அறுவடை முடியும் தருவாயில் உள்ளது. ஓராண்டுக்கும் மேலாக தக்காளிக்கு போதுமான விலை கிடைக்காததால் விவசாயிகள் பலத்த நஷ்டத்தை சந்தித்தனர். நஷ்டத்தை தவிர்க்க தக்காளி சாகுபடி செய்யும் பரப்பை விவசாயிகள் குறைத்தனர்.
புரட்டாசியில் பெய்த தொடர் மழை காரணமாக செடிகளில் தக்காளி அழுகி வருகிறது. இதனால் உற்பத்தி இழப்பு ஏற்பட்டது. வெளியூர் வரத்தும் குறைந்து உள்ளது. பல விவசாயிகள் தக்காளி சாகுபடி பரப்பை குறைத்து புரட்டாசி பட்டத்தில் கால்நடை தீவன பயிர்கள் சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டினர்.
இதனால் இரு வாரங்கள் முன்பு வரை 14 கிலோ கொண்ட ஒரு டிப்பர் தக்காளி ரூ.120க்கு விற்பனையான நிலையில், கடந்த வாரத்தில் அது ரூ.250ஆக உயர்ந்தது. தற்போது ஒரு டிப்பர் ரூ. 500ஆக உயர்ந்துள்ளது. விலை உயர்ந்த போதிலும் விளைச்சல் சரிந்ததால் தக்காளி விவசாயிகளுக்கு பெரிய அளவில் பயன் அளிக்கவில்லை.