செய்திகள்
மக்காச்சோளம் தொகுப்பு செயல் விளக்க திடல் - விவசாயிகளுக்கு பயிற்சி
உடுமலை வட்டாரத்தில் 325 ஏக்கரில் மக்காச்சோளம் தொகுப்பு செயல் விளக்க திடல் அமைக்கப்படுகிறது.
திருப்பூர்:
தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் தானியங்கள் திட்டத்தின் கீழ், தாராபுரம், பொங்கலூர், உடுமலை வட்டாரத்தில் 325 ஏக்கரில் மக்காச்சோளம் தொகுப்பு செயல் விளக்க திடல் அமைக்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து விவசாயிகளுக்கான விழிப்புணர்வு பயிற்சி கண்டியன்கோவிலில் நடந்தது. பொங்கலூர் வட்டார வேளாண் உதவி இயக்குனர் பொம்முராஜ் வரவேற்றார்.
முகாமில் மக்காச்சோள உற்பத்தியை அதிகரிக்க இடுபொருள் மற்றும் கோடை உழவின் முக்கியத்துவம், உயிர் உரங்கள், விதை நேர்த்தி, வீரிய ஒட்டு ரகமான கோ 8 மக்காச்சோளத்தின் சிறப்பு அம்சங்கள், விதை மற்றும் வேர் மூலம் பரவும் நோய்கள், திரவ உயிர் உரங்கள் பயன்படுத்துதல் குறித்து செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
இதில் தேசிய உணவு பாதுகாப்பு திட்ட மாவட்ட திட்ட ஆலோசகர் அரசப்பன், தொழில்நுட்ப உதவியாளர் கிருத்திகா, வேளாண் அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.