அடையாளம் தெரியாத வாகனம் மோதி மனைவி கண்ணெதிரே கணவர் பலி
தாடிக்கொம்பு:
திண்டுக்கல் அருகே உள்ள அம்மையநாயக்கனூர் பொட்டிசெட்டிபட்டியைச் சேர்ந்தவர் பொன்ராஜ் (வயது 55). இவரது மனைவி செல்லம்மாள் (50). இவர்கள் 2 பேரும் இன்று காலை திண்டுக்கல் ஆர்.எம்.காலனியில் உள்ள தங்கள் மகன் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர்.
திண்டுக்கல் - கரூர் புறவழிச்சாலையில் அஞ்சலி ரவுண்டானா அருகே வந்த போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வேன் இவர்கள் மீது மோதியது. இதில் பொன்ராஜ் ஒரு புறமும், செல்லம்மாள் மறுபுறமும் விழுந்தனர். பொன்ராஜ் நிலை தடுமாறி சாலையில் விழுந்த அதே வேளையில் வேனின் பின் சக்கரம் அவரது தலையில் ஏறி இறங்கியது.
இதில் மனைவி கண் முன்னே பொன்ராஜ் பரிதாபமாக துடிதுடித்து இறந்தார். இதை பார்த்ததும் செல்லம்மாள் கதறி அழுதார். அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் ஒன்று கூடி இது குறித்து தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொன்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.