செய்திகள்
மடத்துக்குளம் பகுதியில் நான்கு வழிச்சாலை பணிகள் தீவிரம்
அடுத்த ஆண்டு நான்குவழி சாலையை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் திட்டமிட்டு தீவிரமாக பணிகள் நடக்கிறது.
மடத்துக்குளம்:
மடத்துக்குளம் தாலுகா மைவாடி, வேடபட்டி, கழுகரை உள்ளிட்ட கிராமப்பகுதியில் உள்ள விளைநிலங்களுக்கு மத்தியில் நான்கு வழிச்சாலை பணிகள் தீவிரமடைந்துள்ளன. பொள்ளாச்சி தொடங்கி திண்டுக்கல் வரை செல்லும் இந்த பாதை ரூ.3,649 கோடி மதிப்பில் அமைக்கப்படுகிறது.
உடுமலை, மடத்துக்குளம் நகரங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் கிராமங்களின் ஓரங்களில் வாகனங்கள் செல்லும் விதமாகவும், தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 2 கி.மீ., தொலைவில் வடக்கு திசையில் இந்த நான்கு வழிச்சாலை கட்டமைக்கப்படுகிறது.
இதற்காக விளைநிலங்களுக்கு மத்தியில் 10 அடி உயரத்திற்கு மண் கொட்டப்பட்டு கனரக எந்திரங்களை பயன்படுத்தி சமன் செய்யப்பட்டு, அதன் மீது வேடப்பட்டி பகுதியில் தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
விளை நிலங்களுக்கு மத்தியில் இந்த திட்டம் நிறைவேற்றப்படுவதால் பாசன வாய்க்கால்கள், சிறு ஓடைகள் வழியாக பாசன நீர் தடையின்றி சீராக வினியோகம் செய்யவும் குறிப்பிட்ட இடைவேளையில் சிறு பாலங்கள், குழாய்கள் அமைக்கும் பணியும் நடக்கிறது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், அடுத்த ஆண்டு நான்குவழி சாலையை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் திட்டமிட்டு தீவிரமாக பணிகள் நடக்கிறது என்றனர்.