செய்திகள்
வாழைத்தோட்டத்து அய்யன் கோவிலில் தடையை மீறி வழிபட்ட பொதுமக்களால் பரபரப்பு
பல்லடம் அருகே உள்ள வாழைத் தோட்டத்து அய்யன் கோவிலில் மகாளய அமாவாசையை முன்னிட்டு பொதுமக்கள் சிலர் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
பல்லடம்:
கொரோனா நோய்தொற்று பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு வழிபாட்டு தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை தரிசனத்திற்கு தடை விதித்துள்ளது. மேலும் நேற்று மகாளய அமாவாசையையொட்டி தடை விதிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் பல்லடம் அருகே உள்ள வாழைத்தோட்டத்து அய்யன் கோவிலில் மகாளய அமாவாசையை முன்னிட்டு பொதுமக்கள் சிலர் பொங்கல் வைத்து வழிபட்டனர். அப்போது அங்கு இருந்த அதிகாரிகள் கோவிலில் பொதுமக்கள் வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளனர்.
இதனை ஏற்காமல் அதிகாரியுடன் வாக்குவாதம் செய்த பொதுமக்கள் பொங்கல் வைத்து, சாமியை வழிபட்டு விட்டுத்தான் செல்வோம் என கூறினர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கோவை வடக்கு மாவட்ட பொதுச் செயலாளர் ஜெய்ஹிந்த் முருகேசன், பா.ஜ.க.,திருப்பூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பொதுமக்களை பொங்கல் வைத்து வழிபட அனுமதியளிக்குமாறு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் அவர்கள் பொங்கல் வைத்து சாமியை வழிபட்டுச் சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.