செய்திகள்
மழையால் சின்ன வெங்காயம் அறுவடை பணிகள் பாதிப்பு
ஏற்கனவே அறுவடை செய்த விவசாயிகள் மழையில் சின்னவெங்காயம் நனைவதை தவிர்க்கவும், இருப்பு வைத்து விற்பனை செய்யவும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
உடுமலை:
உடுமலை சுற்றுப்பகுதியில் கிணற்றுப் பாசனத்துக்கு சின்னவெங்காயம் ஒவ்வொரு சீசனிலும் 10 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக சாகுபடியாகிறது. இச்சாகுபடிக்கு அதிக செலவு பிடிப்பதால் அறுவடை காலத்தில் போதிய விலை கிடைக்காமல் ஏற்படும் விலை வீழ்ச்சி விவசாயிகளை பாதிக்கிறது.
எனவே விலை நிலவரங்கள் அடிப்படையில் சின்ன வெங்காயத்தை இருப்பு வைத்து விற்பனை செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சீசனில், நடவு செய்யப்பட்ட சின்ன வெங்காயம் அறுவடை பணிகள் தொடங்கியதும் உடுமலை பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. விளைநிலத்தில் அதிக ஈரம் மற்றும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை காரணமாக அறுவடை பணிகள் பாதித்துள்ளது.
ஏற்கனவே அறுவடை செய்த விவசாயிகள் மழையில் சின்ன வெங்காயம் நனைவதை தவிர்க்கவும், இருப்பு வைத்து விற்பனை செய்யவும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். விளைநிலங்களில் சின்ன வெங்காயத்தை தரம் பிரித்து, பட்டறை அமைக்கவும் ஆர்வம் காட்டுகின்றனர். தார்ப்பாயில் வெங்காயத்தை உலர விட்டு ஈரப்பதத்தை குறைக்கவும் முயற்சிக்கின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்:
அறுவடை செய்த சின்ன வெங்காயம் மழையில் நனைந்தால் தரம் குறையும் வாய்ப்புள்ளது. எனவே அறுவடை முடிந்ததும், இருப்பு வைப்பதற்கான பணிகளை துவக்கியுள்ளோம். பலர் அறுவடையை தாமதமாக மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர் என்றனர்.