செய்திகள்
கோப்புபடம்

நமக்கு நாமே திட்டம் - பொதுமக்கள் கோரிக்கை மனு அளிக்கலாம்

Published On 2021-10-05 05:20 GMT   |   Update On 2021-10-05 05:20 GMT
புதிய வணிக வளாகங்கள், அங்கன்வாடி, நூலகம், சமுதாய கூடம் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் அரசு வழிகாட்டு நெறிமுறைகளுடன் நடைபெறும்.
பல்லடம்:

‘நமக்கு நாமே’ திட்டத்தில் கரம் கோர்க்க விரும்பும் தன்னார்வலர், பொதுமக்கள் கோரிக்கை மனு அளிக்கலாம் என பல்லடம் நகராட்சி கமிஷனர் விநாயகம் அறிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசின் ‘நமக்கு நாமே’ திட்டம் பல்லடம் நகராட்சியில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பூங்கா அபிவிருத்தி, விளையாட்டுத்திடல், உடற்பயிற்சி கூடம், தெருவிளக்கு அமைத்தல், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல், மரக்கன்றுகள் நடுதல், அரசு பள்ளி கல்லூரி மருத்துவமனை, ஆரம்ப சுகாதார  நிலைய மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

புதிய வணிக வளாகங்கள், அங்கன்வாடி, நூலகம், சமுதாய கூடம் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் அரசு வழிகாட்டு நெறிமுறைகளுடன் நடைபெறும். இத்திட்டங்களுக்கான மொத்த மதிப்பீட்டில் மூன்றில் இரண்டு பங்கு அரசும் ஒரு பங்கு தன்னார்வலர் அல்லது பொதுமக்கள் பங்களிப்புடனும் மேற்கொள்ளப்படும்.

இப்பணிகளில் தொழில் நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ரோட்டரி, லயன்ஸ் சங்கங்கள், குடியிருப்போர் நலச்சங்கம், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவை பங்கேற்கலாம்.

நகரின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட உள்ள ‘நமக்கு நாமே’ திட்டத்தில் கரம் கோர்க்க விரும்பும் தன்னார்வலர், பொதுமக்கள் கோரிக்கை மனு அளிக்கலாம். மேலும் விவரங்களுக்கு பல்லடம் நகராட்சியை அணுகலாம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News