செய்திகள்
கருப்பாயூரணியில் கொள்ளை நடந்த டாக்டர் வீடு.

மதுரை அருகே டாக்டர் வீட்டில் 50 பவுன் நகை கொள்ளை

Published On 2021-10-05 03:27 GMT   |   Update On 2021-10-05 03:27 GMT
மதுரை அருகே டாக்டர் வீட்டில் 50 பவுன் நகை கொள்ளை போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மதுரை:

மதுரை அருகே கருப்பாயூரணி விக்னேஷ் அவென்யூ பகுதியை சேர்ந்தவர் சுப்பையா கண்ணன். இவருடைய மகன் பிரேம்குமார் (வயது 48). பல் டாக்டரான இவர், வீட்டின் அருகே பல் மருத்துவமனை நடத்தி வருகிறார். பிரேம்குமாரின் தாய்-தந்தை தேனி மாவட்டம், கம்பத்தில் வசித்து வருகின்றனர். அவர்களை பார்ப்பதற்காக, கடந்த 29-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு பிரேம்குமார் குடும்பத்தினருடன் அங்கு சென்றிருந்தார். அவர் குடும்பத்துடன் சென்றதை அறிந்த மர்மநபர்கள், வீட்டின் மாடியில் இருந்த இரும்பு கதவை உடைந்து வீட்டிற்குள் புகுந்தனர்.

பின்னர் வரவேற்பறையின் மரக்கதவை உடைத்து அறைக்குள் புகுந்து பீரோவில் இருந்த 10 பவுன் செயின், 10 பவுன் ஆரம், 10 பவுன் மயில் டாலர் செயின், 10 பவுன் வளையல்கள் உள்ளிட்ட 49 பவுன் நகைகளை கொள்ளையடித்தனர். வெள்ளி குத்து விளக்கு, வெள்ளி செம்பு, 6 வெள்ளி டம்ளர்கள், ரூ.50 ஆயிரம் உள்பட ரூ.10 லட்சத்து 29 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

இந்த நிலையில், பிரேம்குமார் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு அங்கிருந்த பொருட்களும் திருடு போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே இது குறித்து அவர் கருப்பாயூரணி போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மோப்ப நாய் உதவியுடன் விசாரணையை மேற்கொண்டனர். இதுபோல், கொள்ளையர்கள் விட்டு சென்ற தடயங்களையும், கைரேகை நிபுணர்கள் சேகரித்தனர்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிவு செய்து அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News