செய்திகள்
ஜோலார்பேட்டை அருகே முதியவரிடம் செயின் பறிப்பு
ஜோலார்பேட்டை அருகே முதியவரிடம் செயின் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டையை அடுத்த பெரியமூக்கனூர் ஆலகரியான் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 65). அதே பகுதியில் டீக்கடை மற்றும் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று மாலை 5 மணியளவில் இருசக்கர வாகனத்தில் மளிகை கடைக்கு வந்த இரண்டு நபர்கள் தண்ணீர் பாட்டில் கேட்டுள்ளனர். அப்போது கணேசன் குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து தண்ணீர் பாட்டில் எடுத்து கொடுத்துள்ளார். இந்த நேரத்தில் திடீரென கணேசன் கழுத்தில் இருந்த 5 பவுன் செயினை பறித்துக் கொண்டு மோட்டார்சைக்கிளில் தப்பி சென்றுவிட்டனர்.
இது சம்பந்தமாக கணேசன் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி மற்றும் போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.