செய்திகள்
கொசுக்கள் உற்பத்தி கண்டறியப்பட்டால் அபராதம் - அதிகாரிகள் எச்சரிக்கை
வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதால் டெங்கு காய்ச்சலை தடுக்க கண்காணிப்புக் குழு அமைக்கப்படவுள்ளது.
உடுமலை:
உடுமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் கிராமங்களில் கொசு உற்பத்தி அதிகரித்து காணப்படுகிறது.
டெங்கு பரவாமல் தடுக்க நோய்த்தடுப்பு முறைகள் முடுக்கிவிடப்பட்டாலும் வீடுகளில் தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசு உற்பத்தியாகிறது. எனவே கொசுக்கள் உற்பத்தியாவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படவுள்ளது.
இதுகுறித்து ஒன்றிய அதிகாரிகள் கூறியதாவது:
வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதால் டெங்கு காய்ச்சலைத்தடுக்க கண்காணிப்புக் குழு அமைக்கப்படவுள்ளது. டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க குடியிருப்பு பகுதிகளை சுகாதாரமாக வைத்து கொள்ளாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படவுள்ளது.
டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள், நன்னீரில் மட்டுமே உற்பத்தியாகும். எனவே வீடுகளில் உள்ள தொட்டிகள், பாத்திரங்கள், குடிநீர் தொட்டிகளை வாரம் ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும்.
தேவையற்ற இடங்கள் மற்றும் பொருட்களில் மழைநீர் தேங்குவதை தடுக்கவும், திறந்திருக்கும் தண்ணீர் தொட்டிகளில் கொசு மருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.