செய்திகள்
வலி நிவாரணி என்று நினைத்து எலி மருந்தை குடித்த மூதாட்டி பலி
மதுரை அருகே வலி நிவாரணி என்று நினைத்து எலி மருந்தை குடித்த மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை திருப்பாலை பாலாஜி நகரை சேர்ந்தவர் அங்கம்மாள் (வயது 56). இவருக்கு சில வாரங்களாக தீராத வயிற்று வலி இருந்து வந்தது. இதற்காக அவர் பல இடங்களில் மருத்துவம் பார்த்தார். ஆனாலும் நோய் குணமாகவில்லை.
அங்கம்மாள் சம்பவத்தன்று மாலை வீட்டில் வயிற்று வலி மருந்தை தேடி உள்ளார். அப்போது அவரது கையில் எலி மருந்து கிடைத்து உள்ளது. இதனை வயிற்றுவலி மருந்து என்று தவறாக நினைத்த அங்கம்மாள், குடித்து உள்ளார். சிறிது நேரத்தில் அவருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.
அவரை உறவினர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அங்கம்மாள் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.