செய்திகள்
கைது

கயத்தாறு அருகே வீட்டின் ஓட்டை பிரித்து திருட முயன்ற 2 வாலிபர்கள் கைது

Published On 2021-09-26 09:21 GMT   |   Update On 2021-09-26 09:21 GMT
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே பட்டப்பகலில் வீட்டின் ஓட்டை பிரித்து திருட முயன்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
கயத்தாறு:

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள அகிலாண்டபுரம் பஞ்சாயத்து சத்திரப்பட்டியை சேர்ந்தவர் சுப்பையா. இவர் நேற்று தனது வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று விட்டார்.

இந்நிலையில் மதியம் அந்த தெருவில் 2 வாலிபர்கள் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து கொண்டிருந்தனர். அப்போது 2 பேரும் அங்கு பூட்டி கிடந்த சுப்பையா வீட்டுக்குள் நுழைந்தனர். வீட்டின் ஓடுகளை பிரித்து உள்ளே இறங்கி திருட முயன்றனர்.

இதனை அந்த பகுதியை சேர்ந்த நாகம்மாள் (வயது73) என்ற மூதாட்டி பார்த்து திருடன் திருடன் என்று கத்தி கூச்சலிட்டார். உடனே அந்த தெருவில் வசிக்கும் பொதுமக்கள் ஓடி வந்து 2 பேரையும் கையும் களவுமாக பிடித்தனர்.

தகவல் அறிந்த கயத்தாறு சப்-இன்ஸ்பெக்டர் ஆன்டனி திலிப் சம்பவஇடத்திற்கு விரைந்து வந்து 2 வாலிபர்களையும் பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றார்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் 9-வது தெருவை சேர்ந்த சுடலை (20), அதே தெருவை சேர்ந்த சுரேஷ் (23) என்பதும், கழிவு பொருட்களை தெருக்களில் சேகரிப்பது போல் நோட்டமிட்டு வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கியதும் தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News