குனியமுத்தூரில் டெய்லர் வீட்டின் கதவை உடைத்து 30 பவுன் நகை,ரூ.3¼ லட்சம் பணம் கொள்ளை
கோவை குனியமுத்தூர் அருகே உள்ள பிருந்தாவன் சர்க்கிளை சேர்ந்தவர் முபாரக்அலி (வயது 48). டெய்லர். இவரது மனைவி சப்னா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று முபாரக் அலி தனது குடும்பத்துடன் கரும்புக்கடையில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு சென்றார்.
அப்போது இவரது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், கம்மல், மோதிரம் உள்பட 30 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 3 லட்சத்து 22 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.
மறுநாள் காலையில் வீட்டிற்கு திரும்பிய முபாரக்அலி வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
இது குறித்து முபாரக்அலி குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக இன்ஸ்பெக்டர் ஹேமலதா தலைமையிலான போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சம்பவஇடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதனை வைத்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 30 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.3 லட்சத்து 22 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.
மேலும் போலீசார் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.