செய்திகள்
கொலை

செஞ்சி அருகே தேர்தல் தகராறில் தக்காளி வியாபாரி குத்திக்கொலை

Published On 2021-09-21 06:31 GMT   |   Update On 2021-09-21 06:31 GMT
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ளாட்சி தேர்தல் தொடர்பான தகராறில் தக்காளி வியாபாரி கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
வல்லம்:

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே அவலூர்பேட்டை போலீஸ் சரகம் கோவில் புரையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 40). தக்காளி வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி ரேவதி ஏற்கனவே இறந்துவிட்டதால் மகள் வித்யாவுடன் வெங்கடேசன் வசித்து வந்தார்.

நேற்று இரவு வித்யா பக்கத்து வீட்டுக்கு சென்றிருந்தார். வீட்டில் வெங்கடேசன் மட்டும் தனியாக இருந்தார். பின்னர் வெளியே சென்றிருந்த வித்யா தனது வீட்டிற்கு சென்றபோது அங்கு வெங்கடேசன் மார்பில் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சல் போட்டார்.

சத்தம் கேட்டு கிராம மக்கள் திரண்டு வந்தனர். பின்னர் இதுபற்றி அவலூர்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் உள்ளாட்சி தேர்தல் மோதல் காரணமாக இந்த கொலை நடந்து இருப்பது தெரிய வந்தது. என்றாலும் வெங்கடேசனை கொலை செய்த நபர்கள் யார்? அவர்கள் எங்கு பதுங்கி உள்ளனர்? என்பது குறித்து போலீசார் துப்பு துலக்கி வருகிறார்கள்.

கொலையுண்ட வெங்கடேசன் உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.



Tags:    

Similar News