செய்திகள்
கைது

பாபநாசத்தில் கொலை வழக்கில் தொடர்புடைய 3 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது

Published On 2021-09-18 10:13 GMT   |   Update On 2021-09-18 10:13 GMT
பாபநாசத்தில் கொலை வழக்கில் தொடர்புடைய 3 வாலிபர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
பாபநாசம்:

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் மேல ரஸ்தா தெருவில் வசித்து வந்த அய்யாபிள்ளை மகன் மனோஜ் என்கிற விக்னேஸ்வரன் (வயது 24) கடந்த மாதம் தனது நண்பர்களுடன் பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி விளையாட்டு மைதானத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது நண்பர்களிடையே ஏற்பட்ட மோதலில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மாள் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் பாபநாசத்தை சேர்ந்த மண்டையன் என்ற தினேஷ் (25), நந்தகுமார் (21), முகிலன் (20) ஆகியோர் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் தினேஷ் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர். இந்நிலையில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று உத்தரவு பிறப்பித்தார்.

அதன்படி அவர்கள் 3 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News