செய்திகள்
மடத்துக்குளம் அருகே சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி
நிகழ்ச்சியில் ஊட்டச்சத்து உணவு குறித்த விழிப்புணர்வு, கர்ப்ப கால பராமரிப்பு மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து விளக்கப்பட்டது.
மடத்துக்குளம்;
கர்ப்பிணிகளுக்கு ஆரோக்கியம் வழங்கும் விதமாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் மற்றும் போஷன் அபியான் குழுமம் சார்பாக கழுகரை மற்றும் கணியூரில் சமுதாய வளைகாப்பு நடந்தது.
மடத்துக்குளம் தாலுகாவின் பல பகுதிகளிலிருந்து 80க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் பங்கேற்றனர். இதில் ஊட்டச்சத்து உணவு குறித்த விழிப்புணர்வு, கர்ப்ப கால பராமரிப்பு மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து விளக்கப்பட்டது.
ஊட்டச்சத்தின் அவசியம் குறித்த நாடகம் நடத்தப்பட்டது. பல்வேறு பழங்கள், ஆரோக்கியமான உணவுகள், சத்துக்களை பெற உதவும் உலர் பழங்கள், காய்கறிகள், கீரைகள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டன. நிகழ்ச்சியில், கர்ப்பிணிகளுக்கு தேவையான ஊட்டச்சத்து வழங்கக்கூடிய பழங்கள் மற்றும் சத்துமிக்க இணை உணவுகள் வழங்கப்பட்டன.
இதில் வட்டார மருத்துவ அலுவலர் விஜயலட்சுமி, குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் வீணா, வட்டார ஒருங்கிணைப்பாளர் கவுதமன், வட்டார திட்ட உதவியாளர் அனுசுயாதேவி மற்றும் இந்த திட்டப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.