செய்திகள்
வளவனூர் அருகே கோவிலுக்கு சொந்தமான இடத்தில் இருந்த ஆக்கிரமிப்பு அகற்றம்
வளவனூர் அருகே லட்சுமி நாராயணப்பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் இருந்த ஆக்கிரமிப்பை இந்து சமய அறநிலையத்துறையினர் அகற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
வளவனூர்:
வளவனூர் அருகே மோட்சக்குளம் கிராமத்தில் பிரசித்திபெற்ற லட்சுமி நாராயணப்பெருமாள் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த கோவிலுக்கு சொந்தமான சுமார் ரூ.1½ கோடி மதிப்பிலான இடத்தை புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த 5-க்கும் மேற்பட்டோர் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள், மாட்டுக்கொட்டகை அமைத்திருந்தனர்.
இந்த நிலையில் கோவில்களுக்கான சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, கோவில் இடங்கள் மீட்கப்படும் என கடந்த சிலநாட்களுக்கு முன்பு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சட்டசபையில் அறிவித்தார்.
அதன்அடிப்படையிலும், விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கஜேந்திரன் ஆகியோரது உத்தரவின்பேரில் உதவி ஆணையர் ஜோதி தலைமையிலான இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் நேற்று மோட்சக்குளத்துக்கு சென்றனர். பின்னர் அவர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அப்போது அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க வளவனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.