செய்திகள்
தேங்காய் எண்ணைக்கான ஜி.எஸ்.டி. வரி உயர்வு - கள் இயக்கம் கண்டனம்
உள்நாட்டு உற்பத்தி உணவுப்பொருளான தேங்காய் எண்ணெய்க்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்களிப்பதே இயற்கை நியதி ஆகும்.
காங்கயம்:
தேங்காய் எண்ணெய்க்கான 5 சதவீத ஜி.எஸ்.டி. வரியை 18 சதவீதமாக உயர்த்தியதற்கு கள் இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தேங்காய் எண்ணெய்க்கான ஜி.எஸ்.டி. வரியை 5 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தி இருப்பதாகத் தெரியவருகிறது. இது ஒரு விவசாய விரோதப் போக்கே ஆகும்.
தமிழ்நாட்டில் 5 கோடித் தென்னை மரங்கள் உள்ளன. மழை மறைவு மாநிலமான தமிழகத்தில் பெரும் சிரமங்களுக்கிடையே தென்னையை விவசாயிகள் வளர்த்து வருகின்றனர். 80 லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரமாகத் தென்னை சாகுபடி உள்ளது.
உள்நாட்டு உற்பத்தி உணவுப்பொருளான தேங்காய் எண்ணெய்க்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்களிப்பதே இயற்கை நியதி ஆகும். இதற்கு மாறாக வரியை உயர்த்தி இருப்பது கண்டனத்துக்குரியது. ஆகவே, மத்திய அரசு இந்த கூடுதல் வரியை கைவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.