மதுரையில் ஆட்டோவில் வந்து செல்போன் பறித்த வாலிபர்கள் கைது
மதுரை:
மதுரையில் செல்போன் திருடர்களை கையும் களவுமாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டார்.
இதையடுத்து மாநகர குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸ் துணை கமிஷனர் ராஜசேகர் உத்தரவின்பேரில், திலகர் திடல் உதவி கமிஷனர் ரவீந்திரபிரகாஷ் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சுஜாதா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் திலகர் திடல் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
ஆரப்பாளையம் யோகநாதன் சுவாமி சன்னதி தெருவைச் சேர்ந்த பெத்து ராஜ் (வயது 23). இவர் அங்குள்ள செல்போன் கடையில் ஊழியராக உள்ளார்.
இவர் ஸ்காட் ரோட்டில் உள்ள கழிவறைக்கு சென்றார். அங்கு ஆட்டோ வந்தது. அதில் 2 பேர் இருந்தனர். அவர்கள் கத்தி முனையில் பெத்து ராஜிடம் செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச் செல்ல முயன்றனர்.
பெத்துராஜ் “திருடன் திருடன்” என்று கூக்குரல் எழுப்பினார். அக்கம் பக்கத்தினருடன் போலீசாரும் சம்பவ இடத்துக்கு திரண்டு வந்தனர்.
அந்த ஆட்டோ வழிமறிக்கப்பட்டு 2 பேரை போலீசார் திலகர் திடல் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் திண்டுக்கல் காமராஜபுரம் முருகன் மகன் வீர சின்னான் (23), திண்டுக்கல் மீனாட்சிபுரம் மணிகண்டன் மகன் வினோத்குமார் (19) என்பது தெரியவந்தது. போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.